கிராமப் பெண்களின் வருமானத்தை உயர்த்தும் சுய உதவிக்குழு!

நன்றி குங்குமம் தோழி

ஒருவரின் வாழ்க்கைக்கு சேமிப்பு என்பது மிகவும் அவசியம். அதை அவர்கள் நிலமாகவோ, பணமாகவோ அல்லது நகையாக சேமிக்கலாம். நகர பெண்களுக்கு போதிய அறிவு இதுபற்றி உள்ளது. ஆனால் கிராமத்தில் உள்ளவர்களுக்கு சேமிப்பு குறித்த திட்டங்கள் பற்றி தெரியவில்லை. சிறுதொழில் செய்வதன் மூலம் தங்களின் சேமிப்பு வருமானத்தினை அதிகப்படுத்தலாம் என்பதை குறிப்பாக பெண்களுக்கு உணர்த்தி வருகிறார்கள் துவாரா KGFS என்ற சுய உதவிக்குழு.இந்த நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரியான ஹுமா இதன் திட்டங்கள் மற்றும் பெண்கள் இதன் மூலம் அடையும் பலன்கள் குறித்து விவரித்தார்.

‘‘எனக்கு இந்த துறையில் 25 வருஷ அனுபவம் உண்டு. பல கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும், சிறு நிதி வங்கிகளிலும் நான் பணியாற்றி இருக்கேன். அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த திட்டம் வகுத்திருக்கேன். இந்த அனுபவம் தான் என்னை துவாராவில் இணைய வழிவகுத்தது. இது சுய உதவிக் குழு நிறுவனமாக செயல்பட்டு வந்தாலும், வங்கி துறையிலும் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கிராம மக்கள் குறிப்பாக பெண்களின் நலனுக்காகவும் அவர்களின் சேமிப்பு அதிகரிக்கவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதுவரை 28 கிராம மக்களுடன் நாங்க இணைந்து செயல்பட்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக பெண்கள் தான் எங்களின் வாடிக்கையாளர்கள்.

பெண்களுக்காகவே இயக்கப்படுவது தான் சுய உதவிக்குழு. ஒவ்வொரு கிராமத்திலும் மகளிர் குழு என்று இயங்கி வரும். இந்த குழுவினை கண்காணிக்க மேலாளர் நியமிக்கப்பட்டு இருப்பாங்க. அவங்க வேலையே பெண்களை ஒருங்கிணைத்து அவர்களை குழுவில் இணைப்பதுதான். ஒருவர் குறைந்தபட்சம் பத்து குழுக்களை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கும் போது குழுவில் இணையும் பெண்கள் குறித்த முழு விவரங்களை சேகரிக்க வேண்டும்.

மேலும் அவங்க கடன் உதவிப் பெற்றாலும், எதற்காக பெறுகிறார்கள், அதனால் அவர்கள் பலன் அடைந்தார்களா? அதைக் கொண்டு அவர்கள் புது தொழில் ஒன்றை அமைத்தார்களா? மேலும் வாங்கிய கடனை அவர்கள் திரும்ப தவணை முறையில் செலுத்தினார்களா? அவ்வாறு செலுத்த தவறினால் அதனை பெறுவதும் இவர்களின் வேலைதான். இவ்வாறு அந்த குழுவினைக் குறித்து அனைத்து விவரங்களும் மேலாளர் தெரிந்த வைத்திருப்பது அவசியம்.

குறைந்த பட்சம் பத்து பேர் இணைந்தால் தான் குழுவினை அமைக்க முடியும். அவ்வாறு இணையும் பெண்கள் சுயதொழில் செய்வதற்காக குழு கடன் பெறுவார்கள். அவ்வாறு பெறும் போது, செய்யும் தொழிலில் லாபம் பார்க்க வேண்டும். அப்போது தான் அவர்களால் அந்தக் கடனை திரும்ப செலுத்த முடியும். ஒரு வேலை நஷ்டம் ஏற்பட்டால், மேலாளர் நஷ்டம் ஏற்பட காரணம் என்ன? அதற்கான தீர்வு குறித்து ஆலோசனை அளிக்க வேண்டும்.

குழுக் கடனைப் பொறுத்தவரை தனிநபராகவும் பெறலாம், அல்லது குழுவில் உள்ள அனைவரும் சேர்ந்து பெறலாம். சேர்ந்து பெறும் போது அனைவரும் அதற்கான கடனை திருப்பி செலத்த வேண்டும். இதில் மிகவும் முக்கியமானது, குழுவில் உள்ளவர்கள் ஒருத்தரை ஒருத்தர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் ஒருத்தர் கடனை செலுத்தவில்லை என்றால், அதனை மற்றவர்களால் திரும்ப பெற முடியும். இவர்கள் அனைவரும் வாங்கிய கடனை சரியாக செலுத்துகிறாரா என்று பார்ப்பது தான் மேலாளரின் முக்கிய வேலை. மேலும் குழு அமைக்க முக்கிய காரணம் பெண்களுக்கான பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது தான்’’ என்றவர் குழுவில் எதற்கெல்லாம் கடன் உதவி பெறலாம் என்பது பற்றி விவரித்தார்.

‘‘சுய உதவிக் குழுப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைதான் கடனாக வழங்கப்படும். காரணம், பெரிய தொகையினை அளிக்கும் போது அவர்
களால் அதனை திரும்பி செலுத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது. துவாரா சுய உதவிக் குழுவாக மட்டுமில்லாமல் சிறு நிதி அளிக்கும் வங்கியாகவும் செயல்படுவதால், இதில் கடன் பெறுவதற்கான பல திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது காய்கறி கடை வைக்க, விவசாயத்திற்கு அக்ரி கடன், மாடுகள் வாங்க எண்டர்பிரைசஸ் கடன் என பல உள்ளன. சிலர் தங்களிடம் இருக்கும் நகை மற்றும் நிலத்தை அடமானம் வைத்தும் கடன் பெறுவார்கள்.

ஒருவரின் தேவைக்கு ஏற்ப வழங்கி வருகிறோம். மேலும் இந்த குழுவின் மேலாளராக பெண்களும் எங்களின் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு அதுகுறித்த பயிற்சியும் நாங்க அளிக்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர முடியும். பொதுவாகவே சுய உதவிக் குழு என்றால் அதில் பெண்கள் தான் குழு உறுப்பினராக இருப்பார்கள். மேலும் இவர்கள் அனைவரும் கிராமத்து பெண்கள் என்பதால், மற்றவர்களிடம் பேசவே தயங்குவார்கள்.

குறிப்பாக ஆண்கள் குழுவின் நிர்வாகியாக இருக்கும் பட்சத்தில் தங்களின் தேவைகளை வெளிப்படையாக எடுத்துரைக்க மாட்டார்கள். அதுவே பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தங்களின் தேவைகள் பற்றி குறிப்பிட தயக்கம் இருக்காது. இதன் அடிப்படையில் தான் இந்த பணியினை ஆண்கள் பார்த்துக் கொண்டாலும், ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பெண்களையும் இந்த வேலைக்கு நியமனம் செய்ய விரும்பினோம். அந்த வேலையில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு தனிப்பட்ட பயிற்சியும் அளிக்கிறோம்.

இவர்களை நாங்க வெல்த் மேனேஜர் என்று குறிப்பிடுவோம். அவர்களின் முக்கிய வேலை குழுவில் இணைபவர்களின் முழு விவரங்களை சேகரிக்க வேண்டும். அவர்கள் செய்யும் வேலை, குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள், ஒரு மாத குடும்ப செலவு, சிறுதொழில் செய்யும் திட்டம் உள்ளதா என்பது குறித்து சர்வே எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் அவர்களின் வருமானத்தை அதிகரித்து வாழ்க்கை தரத்தினை உயர்த்த முடியும். மேலும் இவர்களுக்கு எந்த திட்டத்தின் அடிப்படையில் கடன் அளிக்க முடியும் என்பது குறித்தும் ஆராய்வோம். சிலருக்கு வரும் வருமானத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும் என்று தெரியாது.

அவர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி அல்லது தங்கத் திட்டத்தில் சேமிப்பு போன்றவற்றை குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவோம். இதன் மூலம் ஒருவரின் நிதி நிலைமையை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பதற்கான பயிற்சியினை அளிக்கிறோம். இந்த விவரங்களை நாங்க ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று சொல்ல முடியாது என்பதாலே அந்த கிராமத்தில் உள்ளவர்களை தேர்வு செய்து, அவர்களை மேலாளராக செயல்பட பயிற்சி அளிக்கிறோம். ஒருவருக்கு பத்து குழு என்று நியமிக்கும் போது, அவர்கள் அந்த குழுவின் அனைத்து செயல்பாடு குறித்தும் தெரிந்துகொள்வதால், தேவையான உதவியினை நாங்க ஏற்படுத்திக் கொடுக்க வசதியாக இருக்கும்.

ஒரு வார பயிற்சி காலத்தில் துவாராவின் அனைத்து திட்டங்கள் மற்றும் செயல்பாடு குறித்து சொல்லிக் கொடுப்போம். +2 அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருப்பவர்கள் இந்த பயிற்சியினை மேற்கொள்ளலாம். பயிற்சி பெற்ற பிறகு அவர்கள் அனுபவமிக்க நிர்வாகியுடன் நேரடியாக வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டும். அதன் மூலம் குழு உறுப்பினரோடு எவ்வாறு பேச வேண்டும், குழுவின் செயல்பாடு குறித்து விளக்கும் முறைகளை தெரிந்து கொள்வார்கள்.

3 நாட்கள் பீல்டு விசிட் செய்த பிறகுதான் அவர்கள் ேநரடியாக களத்தில் இறங்கி தங்களின் வேலையினை துவங்குவார்கள். தற்போது 400 இடங்களில் எங்களின் குழு செயல்பட்டு வருகிறது. 3000 பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் 20% பெண்கள். மேலும் 20 இடங்களில் குழுவினை விரிவாக்க இருக்கிறோம். அதில் செயல்பட 150 பணியாளர்கள் தேவை என்பதால், கிராமத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று விரும்பும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். இதன் மூலம் தமிழகம் முழுதும் உள்ள கிராமங்களின் வளங்களை உயர்த்த முடியும்’’ என்றார் ஹுமா.

தொகுப்பு: ப்ரியா

Related posts

முகப் பருக்களை தடுக்கும் வழிமுறைகள்!

வெளிநாட்டினர் கொண்டாடும் பிச்வாய் ஓவியங்கள்!

உன்னத உறவுகள்