விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதை தொடர்ந்து இன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தேஜ கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 2 வாரமாக வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிகட்ட பிரசாரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயாவை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். அன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் வெளியூர்களிலிருந்து வந்த அரசியல் கட்சியினர், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேறினர். இதனை தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதனையொட்டி நேற்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் மற்றும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மை உள்ளிட்ட பொருட்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று மாலை 6 மணிக்குள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அவை கொண்டு செல்லப்பட்டது.

* 13ம் தேதி 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை
இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் ஸ்டிராங் ரூமில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படுகின்றன. துணை ராணுவம், துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. தொடர்ந்து 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை 16 மேஜைகளில் 20 சுற்றுகளாக எண்ணி முடிக்கப்படும். காலை 11 மணியளவில் வெற்றி நிலவரம் தெரிந்து விடும்.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு