விக்கிரவாண்டியில் பாமக போட்டியா? அன்புமணி பேட்டி

திண்டிவனம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. திமுக சார்பில் வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பாஜ கூட்டணியிலுள்ள பாமக போட்டியிடுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே மணி, மாநில நிர்வாகி வடிவேல் ராவணன், தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம், பாமக முன்னாள் பொதுச்செயலாளர் தீரன், மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக முன்னாள் எம்.பி மருத்துவர் செந்தில், வழக்கறிஞர் பாலு, மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் பாமக தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசித்தபின் பாமகவின் முடிவை அறிவிப்பேன்’ என்றார்.

* பாஜவும் போட்டியிட விருப்பம்
பாமக போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில், இத்தொகுதியில் முன்னாள் எம்எல்ஏவான பாஜ மாநில துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத், பாஜ சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேஜ கூட்டணிக்குள் சலசலப்பு உருவாகி உள்ளது.

Related posts

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது