விக்கிரவாண்டி தொகுதியில் சாதனை வெற்றி பெற்ற அன்னியூர் சிவா முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து: அமைச்சர்களும் நன்றி தெரிவித்தனர்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதியில் சாதனை வெற்றி பெற்ற அன்னியூர் சிவா, முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அமைச்சர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணியை 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்தார். பாமக வேட்பாளர் அன்புமணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார். திமுக வேட்பாளரின் சாதனை வெற்றியை தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

அப்ேபாது சாதனை வெற்றி பெற்ற அன்னியூர் சிவாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சந்திப்பின் போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் பொன்முடி, கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி, அமைச்சர்கள் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், ஆர்.காந்தி, சக்கரபாணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கௌதம் சிகாமணி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதையொட்டி சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஆற்காடு சுரேஷின் மனைவி கைது: சென்னை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை!!

ரவுடி செல்வத்தை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்: கன்னியாகுமரி அருகே பரபரப்பு

மும்பையில் 2 பாதிரியார்கள் மீது நடந்த தாக்குதல் : 2 பேர் கைது