Saturday, July 6, 2024
Home » விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

by MuthuKumar

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை நோட்டீசில் அச்சிட்டு பாமகவினர் வீதி வீதியாக விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, தேஜ கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பின்வாங்கிய நிலையில் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. பிரசாரத்துக்கு 5 நாட்களே எஞ்சி உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேஜ கூட்டணியில் பாமக வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, அவரது மனைவி சவுமியா அன்புமணி உள்ளிட்டவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் பாமக தலைவர் அன்புமணி, இந்த தேர்தலில் அதிமுகவினர் தங்கள் வாக்குகளை பாமகவுக்கு அளிக்க வேண்டும், ஆதரவு தர வேண்டும் என்று பேசி வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் பாமகவுக்கு அதிமுகவினர் ஆதரவு அளிக்க வேண்டாம் என்று ரகசிய உத்தரவு போட்டுள்ளார். இந்நிலையில் அதிமுகவினர் ஓட்டுகளை எப்படியாவது வாங்குவதற்காக ஜெயலலிதாவின் புகைப்படத்தை பெரியதாக அச்சடித்து தேர்தல் பிரசார நோட்டீஸ்களிலும், பிரசார மேடை பொதுக்கூட்ட இடங்களில் வைக்கப்பட்ட பேனர்களிலும் போட்டு அதிமுகவினர் வாக்குகளை கவர புது வியூகத்தில் பாமகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விக்கிரவாண்டி, காணை பகுதிகளில் நடந்த பாமக பிரசார நிகழ்ச்சிகளில் மோடி படத்துக்கு மேல் பகுதியில் பெரிய அளவில் ஜெயலலிதாவின் படத்தை போட்டு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று தேஜ கூட்டணிக்கு சென்ற பாமக தற்போது ஜெயலலிதாவின் புகைப்படத்தை போட்டு எப்படி பிரசாரம் மேற்கொள்ளலாம் என அதிமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாமகவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அடடே விளக்கம்
பாமக தரப்பில் கூறுகையில், தேஜ கூட்டணியில் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அமமுக டிடிவி தினகரன் ஆகியோர் இருக்கிறார்கள். அவர்கள் ஜெயலலிதாவின் புகைப்படத்தை போட்டு தான் இயக்கத்தை வழிநடத்துகிறார்கள். எனவே கூட்டணி கட்சி என்பதால் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பதிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பாஜ வழியில் பாமக
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜவினர் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்தை பயன்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தேர்தல் பிரசார கூட்டங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை வானளாவ புகழ்ந்து பேசி வாக்கு கேட்டனர். ஆயினும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதே பாணியை பயன்படுத்தி தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவினர் துண்டு நோட்டீஸ், பேனர்களில் ஜெயலலிதா படத்தை பெரிய அளவில் போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

17 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi