விருதுநகர் தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து, சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் அவரது தாயாரும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா நேற்று இரவு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: விஜய பிரபாகரன் வேறு யாருமில்லை. இந்த மண்ணின் மைந்தன். உங்கள் அண்ணன் மகன். உங்கள் அண்ணன் மகனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும். 32 வயதில் படித்து முடித்துவிட்டு எத்தனையோ கனவுகள் இருந்தாலும் அதை தூக்கி எறிந்துவிட்டு தந்தையின் வழியில் மக்கள் சேவை செய்ய இந்த தொகுதியில் போட்டியிடுகின்றார். உங்கள் எல்லாருக்கும் தெரியும். தம்பிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. இந்த விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் இந்த தொகுதியில், இந்தத் தொகுதி மக்களின் தலைமையில் தான் அவருக்கு திருமணம் நடக்கும்.
விஜய பிரபாகரன் வயதில் சின்னவர் என்று நினைக்காதீர்கள். அவர் நல்ல அறிவாளி. உலகம் முழுவதிலும் சுற்றி வந்துள்ளார். பல்வேறு மொழிகளை பேசும் திறமை கொண்டவர். நாடாளுமன்றத்தில் உங்கள் பிரச்னைகளை எழுப்பி அதற்கு தீர்வு காணும் வல்லமை அவரிடம் உள்ளது. விஜய பிரபாகரன் குணத்திலும் பழகுவதிலும் கேப்டன் மறு உருவம். 34 வருடம் கேப்டனுக்கு மனைவியாக வாழ்ந்தும் அவருக்கு தாயாக இருந்தும் சேவை செய்திருக்கின்றேன். கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
மாஜி அமைச்சர் விதிமீறி பிரசாரம்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு திடீர் திடீரென 80407 59221 என்ற எண்ணில் இருந்து அழைப்புகள் வருகிறது. அவசர அழைப்பாக கருதி எடுத்து பேசினால், ‘முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகிறேன்…’ என்று சொல்லி பேச துவங்குகிறது ஒரு குரல். சுமார் 49 விநாடிகள் வரை இந்த கால் தொடர்கிறது. இது உண்மையில் ராஜேந்திர பாலாஜியின் குரல்தானா, வாக்காளர்களின் எண்களை எவ்வாறு பெற்றனர், இதற்கு தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறப்பட்டதா, இதற்கான செலவினங்கள் வேட்பாளர் விஜயபிரபாகரனின் கணக்கில் ஏற்றப்படுமா என மாற்றுக் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.