சென்னை: டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு செய்ய அவகாசமும், பயிர்காப்பீட்டு தொகையையும் அரசே ஏற்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், விவசாயிகள் அனைவரும் பயிர்காப்பீடு செய்ய 30ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும். ஆனால் தீபாவளி பண்டிகை காலம் என்பதாலும், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதாலும், கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கல் பெற, விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஆகவே பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை, விவசாயிகள் நலன் கருதி வரும் 30ம் தேதி வரை நீட்டித்து தர வேண்டும். மேலும் டெல்டா பகுதிகளில் விவசாயத்திற்கு போதிய நீர்வரத்து இல்லாமல் வறட்சி நிலவியதால், மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் கடும் சிரமத்தில் இருப்பதால், கடந்த காலங்களில், டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலன்கருதி, காப்பீட்டுத் தொகை முழுவதும் அரசே செலுத்தியது. அதேபோல் இம்முறையும், தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும்.