விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் மனைவி பாத்திமா மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி நடத்தும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வருகிறார். மூத்த மகள் மீரா (16) பிரபல சர்ச் பார்க் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இளைய மகள் லாராவும் அதே பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். மூத்த மகள் படிப்பில் மட்டும் இல்லாமல் பேட்மிண்டன் விளையாடுவதிலும் திறமையானவர். விநாயகர் சதுர்த்தி விழா என்பதால் நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மீரா தற்போது 12ம் வகுப்பு படித்து வருவதால், தனது தோழிகளை பார்த்து படிப்பு சம்பந்தமாக ஆலோசனை நடத்த நேற்று முன்தினம் சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த மீரா சற்று மன அழுத்தத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
படிப்பில் அதிக நாட்டம் இருப்பதால் மீரா கடந்த ஓராண்டாக மன அழுத்தத்திற்கு மயிலாப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்ட பிறகு, வழக்கத்தை விட தனது தங்கை லாரா மற்றும் பெற்றோரிடம் சந்தோசமாக பேசியிட்டு மீரா தூங்க சென்றுள்ளார். எப்போதும், விஜய் ஆண்டனி இரவு நேரங்களில் மகள்கள் தனித்தனி அறைகளில் தூங்குவதால் அவர்களை பார்ப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை 3 மணி அளவில் திடீரென விழித்த விஜய் ஆண்டனி, தனது மூத்த மகள் அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மீரா மின்விசிறி ஊக்கில் துப்பட்டாவில் தூக்குப்போட்டு தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து, கதறி துடித்தார்.
உடனடியாக மீராவை மீட்டு தனது காரிலேயே மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு டாக்டர்கள் மீராவை பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட விஜய் ஆண்டனி, மகளின் மீதான பாசத்தை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனை வளாகத்திலேயே அழுது துடித்தார். பின்னர் தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு வந்து மீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு ெசய்து, தடயவியல்துறை அதிகாரிகளை வரவழைத்து அவர்களுடன் போலீசார், மீரா தற்கொலை செய்து கொண்ட அறை முழுவதும் சோதனை நடத்தினர். மேலும், மீரா பயன்படுத்திய செல்போனை போலீசார் கைப்பற்றினர். பிறகு அவர் செல்போனில் கடந்த 2 நாட்களாக யார் யாரிடம் பேசியுள்ளார் என்ற பட்டியலை போலீசார் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சர்ச் பார்க் பள்ளியின் முதல்வர், வகுப்பு ஆசிரியர்கள், உடன் படித்து வரும் தோழிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மன அழுத்தம் காரணமாக மீரா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தனது பாசமிகு மகள் மீராவின் இழப்பை தாங்க முடியாமல், விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி அழுதுகொண்டே இருந்தனர். அவர்களை நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மீராவின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மூத்த டாக்டர்கள் தலைமையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு விஜய் ஆண்டனியிடம் நேற்று மதியம் ஒப்படைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மீராவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. மீராவின் உடலுக்கு சினிமா முன்னணி பிரபலங்கள் முதல் மீராவுடன் படித்த சக மாணவர்கள், சர்ச் பார்க் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் அனைவரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அதைதொடர்ந்து மீராவின் உடல் இன்று காலை பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி முடிந்ததும் நல்லடக்கம் செய்யப்படும்.
* பள்ளியில் கல்வி அதிகாரி விசாரணை
மீரா தற்கொலையை தொடர்ந்து, அவர் படித்து வந்த பிரபல தனியார் பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் விசாரணை நடத்தினார். அப்போது பிளஸ்2 படிக்கும் மீராவுக்கு படிப்பு தொடர்பாக ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா, பாட சுமைகள் ஏதேனும் இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை பள்ளியின் முதல்வர், வகுப்பு ஆசிரியர்கள், விளையாட்டு ஆசிரியர்கள், பள்ளியில் பேட்மிண்டன் பயிற்சி அளித்த பயிற்சியாளர் ஆகியோரிடம் கேட்டறிந்தனர். அதற்கு அவர்கள் அளித்த பதிலை அவர் பதிவு செய்துகொண்டார்.
*தற்கொலை செய்த அறையில் சிக்கிய கடிதத்தால் பரபரப்பு
விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவரது பள்ளி பை மற்றும் நோட்டுகளை சோதனையிட்டபோது, 3 பாட புத்தக நோட்டுகளில் ஒரே மாதிரியாக ‘லவ் யூ ஆல் தேங்க்யூ ஆல்’ என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் மீரா தற்கொலை முடிவை பல நாட்களுக்கு முன்பே எடுத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் தனது பெற்றோர் குறித்து அந்த நோட்டு புத்தகத்தில் எந்த குறிப்பும் எழுதி வைக்கப்படவில்லை. எனவே மீராவின் தற்கொலையில் பல மர்மங்கள் மறைந்திருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து போலீசார் மீரா தற்கொலை விவகாரத்தை மிகவும் கவனத்துடன் கையாண்டு வருகின்றனர்.