சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் .எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கொள்கைக் கூட்டணிக்கு 40/40 தொகுதியிலும் வெற்றியை தேடித் தந்துள்ளனர் வாக்காள பெருமக்கள். கழகத்தின் சார்பிலும் இந்தியா கூட்டணி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கும், தேர்தல் வெற்றிக்காக உழைத்த கழக நிர்வாகிகள்-தொண்டர்கள்-கூட்டணி கட்சியினர் ஆகியோருக்கு என் அன்பும் நன்றியும். தலைவராக, தான் சந்தித்த 8 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வென்று, வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் வெற்றி நாயகர் மு.க.ஸ்டாலின் வெற்றியை நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு சமர்ப்பிப்போம். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.