Saturday, July 6, 2024
Home » சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது, பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது, பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

by Ranjith

* புயல் கரையை கடக்கும் அறிவிப்பு வரும்வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது. இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வந்தது.

குறிப்பாக சென்னையில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கடந்த 3 நாட்களாக பெரும்பாலும் சென்னையில் வெயிலை பார்க்க முடியாத நிலைதான் இருந்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 580 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 670 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 670 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

புதிதாக உருவாகியுள்ள இந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை 5 மணி முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால், அலுவலகம் உள்ளிட்ட பணிகளுக்கு சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலு பெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 4ம் தேதி (நாளை) முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும்.

பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 5ம் தேதி முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

4ம் தேதி (நாளை) வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

5ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு (இன்று) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு (இன்றும், நாளையும்) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும், ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன- மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் கன்னடயன் அணைக்கட்டில் 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கோடியக்கரை 7 செ.மீ, கன்னியாகுமாரி மயிலாடி, திருக்குவளை, செங்கோட்டை, வேதாரண்யம், அம்பாசமுத்திரம், முத்துப்பேட்டை, மணிமுத்தாறு, குண்டாறு அணையில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடதமிழக கடலோரப்பகுதிகளில் இன்று மாலை முதல் மணிக்கு சூறாவளி காற்று 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், 4ம் தேதி (நாளை) மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று இன்று காலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், இன்று மாலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, நாளை மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும்.

வட ஆந்திர கடலோரப் பகுதிளில் நாளை மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 5ம் தேதி மாலை முதல் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், புயல் கரையை கடந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என சென்னை மாநகர காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* ஆரஞ்ச் அலர்ட்
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை பெய்யும் என்பதால் (ஆரஞ்ச்) அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

4 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi