செய்யூர்: சூனாம்பேடு அருகே விஷபூச்சி கடிதத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட இல்லீடு கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் மகன் தமிழ்செல்வன்(9). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், தமிழ்செல்வன் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது பெற்றோருடன் படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு சிறுநீர் கழிப்பதற்காக வீட்டின் வெளியே வந்துள்ளார். அப்போது, விஷபூச்சி ஒன்று அவரை கடித்துள்ளது. இதனால், வலி தாங்க முடியாமல் கத்தியபடி மயங்கி விழுந்தார். இதனால், பதறிபோன அவரது பெற்றோர், தமிழ்செல்வனை உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றபோது, செல்லும் வழியில் தமிழ்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சூனாம்பேடு போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.