மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பரில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்பில்லாத என்னையும், ஒரு பெண்ணையும் டிஎன்ஏ பரிசோதனைக்கு வருமாறு சம்மன் வழங்கினர். டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான புதுக்கோட்டை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, என்னை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியவர்களின் விபரத்தை, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அதன்பிறகு சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அளித்து, அவர்களின் விளக்கத்தை பெற்று விசாரணை நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.