புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்களையும் 14ம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 4 சிறுவர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என சிபிசிஐடி கோரியிருந்த நிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.
வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று இன்றுடன் 199 நாட்களாகிறது. இந்த வலக்கை சிபிசிஐடி போலீசார் 179 நாளாக விசாரித்து வருகின்றனர்.
இதுவரை 158 பேரிடம் சிபிசிஐடி போலீசார் சாட்சியங்கள் பெற்றுள்ளனர். இருந்தபோதிலும் இந்த வழக்கில் அறிவியல்பூர்வமான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கவேண்டியதால் மரபணு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டனர். இதனடிப்படையில் வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 119 நபர்களுக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதியையும் நீதிமன்றத்தில் பெறப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி முதற்கட்டமாக 11 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில் 3 பேர் மட்டுமே ரத்த மாதிரியை கொடுத்தனர். அதன் பின்னர் மார்ச் 8ம் தேதி மீண்டும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் மொத்தமாக 21 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நீதிமன்றத்தின் அனுமதியோடு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இறையூர் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள், வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 1 சிறுவர் என 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த 10ம் தேதி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதனடிப்படையில் இன்று 3 சிறுவர்களின் பெற்றோர்கள் ஆஜராகியிருந்தனர். இதில் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த சிறுவனின் பெற்றோர் ரத்த மாதிரி கொடுக்க விருப்பமில்லை எனவும் பாதிக்கப்பட்ட எங்களையே குற்றவாளியாக்கும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரு கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்களையும் 14ம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.