*மாணவிகள் உள்பட 10 பேர் படுகாயம்
ஏழாயிரம்பண்ணை : வெம்பக்கோட்டை அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து இளம்பெண் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே திருவேங்கடத்தில் இருந்து சிவகாசியை நோக்கி அரசு பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. அலமேலுமங்கைபுரம் அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் படுகாயமடைந்த செவல்பட்டியை சேர்ந்த முத்துமாரி (23), சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 கல்லூரி மாணவிகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த முத்துமாரிக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.