வேலூர் ஓட்டேரி கரையோர பகுதிகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வீச்சு: பொதுமக்கள் அச்சம்

வேலூர்: வேலூர் ஓட்டேரி கரையையொட்டி குளவிமேடு செல்லும் சாலையோரம் மருத்துவமனைக்கு பயன்படுத்தும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் ஓட்டேரியில் இருந்து குளவிமேடு செல்லும் சாலையோரமும், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரமும், ஏரிக்கரைகளிலும், ஒதுக்குப்புறமான கிராமப்புற சாலைகளிலும் மருத்துவக்கழிவுகள் தொடர்ந்து வீசப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உள்ளாட்சி அமைப்பினர், நெடுஞ்சாலைத்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினர் உள்ளிட்டோர் அவ்வப்ேபாது நடவடிக்கை எடுக்கின்றனர். இருப்பினும் அதே சம்பவங்கள் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் வேலூர் ஓட்டேரியில் இருந்து குளவிமேடு செல்லும் சாலையில் ஓட்டேரி கரையோரம் பலர் குப்பைகள் கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகளுடன் நேற்று மருத்துவமனையில் பயன்படுத்தும் 2 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மர்ம ஆசாமிகள் வீசி சென்றுள்ளனர்.

இதனை அவ்வழியாக சென்ற குளவிமேடு, பள்ளஇடையம்பட்டி, மூஞ்சூர்பட்டு கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சிலிண்டர்கள் வெடித்து விடுமோ என்ற அச்சத்தில், இதுகுறித்து அப்பகுதி மாநகராட்சி கவுன்சிலர் பாபி கதிரவனிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘ஓட்டேரியில் இருந்து குளவிமேடு செல்லும் சாலையோரம் நாளுக்குநாள் மர்ம ஆசாமிகள் மருத்துவக்கழிவுகள் மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதி குப்பை கிடங்காக மாறி வருகிறது. தற்போது குப்பைகளுடன் 2 சிலிண்டர்களை வீசி சென்றுள்ளனர். இந்த விஷயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related posts

திருவள்ளூர் மாவட்ட மின்வாரியத்துக்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு

டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம்

ஒன்றிய அரசை கண்டித்து 5 நாட்கள் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: அவசர தீர்மானம் நிறைவேற்றம்