ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்த தம்பதி மீண்டும் 2வதும் பெண் குழந்தை பிறந்ததால் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதனால், வீட்டின் அருகே இருந்த பப்பாளி மரத்தை வெட்டி அதில் வடியும் விஷம் நிறைந்த பாலை கல் நெஞ்சம் படைத்த தாயும், தந்தையும் பெற்ற குழந்தை என்றும் பாராமல் பிஞ்சு குழந்தைக்கு ஊற்றியுள்ளனர். சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை வாய், மூக்கில் ரத்தம் கொட்டி துடி துடித்து இறந்துள்ளது. பின்னர், இது எதுவுமே நடக்காதது போல், குழந்தை திடீரென மூச்சு பேச்சு இல்லாமல் உள்ளது. உடனே வந்து பார்க்கும்படி டயானா தனது தாய், தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது குழந்தை இறந்தது தெரியவந்தது. அப்போது, குழந்தை எப்படி இறந்தது என்று டயானாவின் தந்தை சரவணன் கேட்டுள்ளார். அதற்கு, ஜீவா முதல் குழந்தை தேஜா போர்வையை எடுத்து குழந்தை முகத்தில் போட்டு விட்டதால் தான் குழந்தை இறந்தது என்று கூறி இருவரும் நாடகமாடியுள்ளனர். பின்னர், டயானாவின் தந்தையும், தாயும் சிறிது தூரம் சென்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அதற்குள் ஜீவா மற்றும் அவரது மனைவி டயானா அவசர அவசரமாக வீட்டின் அருகிலேயே விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் பள்ளம் தோண்டி குழந்தை சடலத்தை புதைத்து உள்ளனர். இதனால், சந்தேகமடைந்த டயானாவின் தந்தை சரவணன் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால், கணவன், மனைவியான ஜீவா மற்றும் டயானா இருவரும் பேசி வைத்தது போல் ஒரே பதில் கூறினர். மேலும், பெற்ற குழந்தை இறந்த துக்கம் கூட இல்லாமல் கணவன், மனைவி இருவரும் வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர். போலீசாரும் விசாரித்தபடி அவர்களை கண்காணித்து கொண்டே இருந்தனர். பின்னர், மாலையில் சூரியன் மறைந்து சற்று இருட்டாக தொடங்கியதும் டயானா தனது முதல் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு நைசாக தப்பியோடி விட்டார். போலீசார் சுதாரித்துக் கொள்வதற்குள் ஜீவாவும் தப்பியோடி தலைமறைவாகி விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் கணவன், மனைவி இருவரையும் துரத்தி சென்றனர். அங்கு முழுவதும் மலைகள், காடுகள் என்பதால் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் காட்டிற்குள் சென்று தலைமறைவாகி விட்டனர். தனது பெற்றோரை காணாமல் முதல் குழந்தை கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.