*திரளான பக்தர்கள் பங்கேற்பு
வேலூர் : வேலூர் சேண்பாக்கம் திரவுபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் சேண்பாக்கத்தில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 7ம் தேதி கொடியேற்றுடத்துடன் தொடங்கியது. ஆன்மீக சொற்பொழிவாளர் ரேவதி மற்றும் கிருஷ்ணனின் கவி வாசித்தலுடன் 37 நாட்கள் மகாபாரத சொற்பொழிவும், 7 நாட்கள் நாடகமும் நடந்தது.
இந்நிலையில் மகாபாரத சொற்பொழிவின் முக்கிய நிகழ்வாக துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதனை முன்னிட்டு பிரம்மாண்டமான துரியோதனன் உருவம் வடிவமைக்கப்பட்டு கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன், துரியோதனன் போரிடும் போர்க்கள கட்சிகள் தத்ரூபமாக நடித்து காட்டினர். தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சேண்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில் தீமிதி விழாவும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 39வது நாளான இன்று தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது.