Thursday, September 19, 2024
Home » வேளாங்கண்ணியில் இன்றிரவு தேர் பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்; 3,500 போலீஸ் பாதுகாப்பு

வேளாங்கண்ணியில் இன்றிரவு தேர் பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்; 3,500 போலீஸ் பாதுகாப்பு

by Mahaprabhu

நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவையொட்டி இன்றிரவு பெரிய தேர்பவனி நடக்கிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்றிரவு நடக்கிறது. முன்னதாக மாலையில் உலக நன்மைக்காக மும்மத பிரார்த்தனை நடக்கிறது. பின்னர் இரவு 7.30 மணிக்கு பேராலயம் முன்பு திருத்தேரை தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் புனிதம் செய்து வைக்கிறார்.

தொடர்ந்து வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடையும். புனித ஆரோக்கிய அன்னை பெரியத்தேரில் எழுந்தருள்கிறார். பெரியத்தேரின் முன்பு 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகியோர் எழுந்தருள்கின்றனர். லட்சக்கணக்கானோர் மத்தியில் செல்லும் தேர் பேராலயம் வந்தடைந்தவுடன் அங்கு ஒன்று சேர மரியே வாழ்க, ஆவே மரியா, பசலிக்கா பசலிக்கா என்ற கோஷம் விண்ணை முட்டும். விழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலயம் மின்னொளியில் ஜொலிக்கிறது. தேர் பவனியில் பங்கேற்க வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் நேற்று முதல் ஆலயத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் கடற்கரை சாலை, வேளாங்கண்ணி ஆர்ச், பழைய வேளாங்கண்ணி, நடுத்திட்டு என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், தஞ்சை சரக டிஐஜி ஹியாவுல்ஹக் ஆகியோர் தலைமையில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், நாகை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை காலை தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் விண்மீன் ஆலயத்தில் கூட்டு திருப்பலியுடன் அன்னையின் பிறப்பு விழா நடைபெறும். இதை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு ஆண்டு பெருவிழா நிறைவடையும்.

You may also like

Leave a Comment

four + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi