மதுராந்தகம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட புதிய மாவட்ட செயலாளர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட புதிய மாவட்ட செயலாளராக செய்யூரை சேர்ந்த வழக்கறிஞர் பொன்னிவளவன் கட்சி தலைமையின் அறிவிப்பின்பேரில் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து கட்சியினர் மதுராந்தகம் தெற்கு பைபாஸ் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில், மண்டல துணை செயலாளர் விடுதலை செல்வன் மற்றும் மதுராந்தகம் நகர செயலாளர் கன ஈழ தமிழரசு, நிர்வாகிகள் எடிசன், முகிலன், உதயா, இமயவளவன், சீனு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், அவர்கள் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மதுராந்தகம் அடுத்த கோழியாளம் கிராமத்தில் அமைந்துள்ள இரட்டைமலை சீனிவாசன் நினைவு மணிமண்டபத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.