*நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் விளையும் முருங்கைக் காய்களுக்கு கர்நாடாக, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முருங்கைக் காய்களை பார்சல் செய்து லாரி, லாரியாக அனுப்பி வருகின்றனர்.கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், ஆத்தங்கரைபட்டி, துரைச்சாமிபுரம், அய்யனார்புரம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, குமணன்தொழு ஆகிய ஊர்களில் 50 ஆயிரம் ஏக்கரில் முருங்கை சாகுபடி நடந்து வருகிறது.
இங்கு வரும் வியாபாரிகள், முருங்கைக் காய்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், கர்நாடகா, கேரளா ஆகிய வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். வடமாநிலங்களில் சாம்பாருக்கு முருங்கைக் காய்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
தினசரி அட்டைப்பெட்டிகளில் முருங்கைக் காய்களை பார்சல் செய்து 15 முதல் 20 லாரிகளில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் முருங்கையின் இலையை, மூலிகைப் பொடிக்கும் அனுப்புகின்றனர். நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாகவே முருங்கை விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. மேலும் இன்னும் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கின்றனர்.
இதனால் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், கடமலைக்குண்டு வேளாண்மைத்துறை மூலம் விவசாயிக்கு தேவையான அனைத்து உரங்கள் பூச்சி மருந்துகள் மானிய அடிப்படையில் வழங்குகின்றனர். இதனால், முருங்கை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்’ என்றனர்.