இதையடுத்து, பொறுப்பு சார்பதிவாளராக இருந்த அலுவலர் சிவக்குமாரை கடந்த 13ம் தேதி சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதற்கிடையில், போலி ஆவணம் மூலம் தனிநபர்களுக்கு பதிவு செய்யப்பட்ட 8.73 ஏக்கர் அரசு நிலத்தை கண்டறிந்து மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதுதொடர்பான அதிகாரிகள் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறுப்பு சார்பதிவாளர் சிவக்குமார், மேலும் 100 ஏக்கர் அரசு நிலத்தை தான செட்டில்மென்ட் முறையில் தனியாருக்கு மோசடியாக பதிவு செய்து கொடுத்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான முழுவிவரங்களுடன், கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காட்பாடி சார்பதிவாளர் பொறுப்பில் சிவக்குமார் இருந்தபோது, செய்யப்பட்ட பத்திரப்பதிவு விவரங்களை ஆய்வு செய்தபோது, காட்பாடி சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட 2 கிராமங்களில் உள்ள 100 ஏக்கர் அரசு நிலத்தை ஒருவர் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என 15 பேருக்கு தான செட்டில்மென்ட் முறையில் பதிவு செய்து கொடுத்துள்ளார். இதற்காக அந்த நபரிடம் சிவகுமார், குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக பெற்று உடந்தையாக செயல்பட்டுள்ளார். 100 ஏக்கர் அரசு நிலத்தை பதிவு செய்தது தொடர்பாக, பத்திரப்பதிவு ஆவணங்கள் மற்றும் அதில் இணைக்கப்பட்டிருந்த ஆதார் அட்டை நகல் ஆகியவை கலெக்டருக்கு அறிக்கையாக சமர்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மோசடியாக பதிவு செய்யப்பட்ட அரசு நிலங்களை மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர். இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான அரசு நிலங்களை மோசடியாக பதிவு செய்த விவகாரத்தில் முக்கிய புள்ளிகள் பலர் சிக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களது விவரங்களை பதிவுத்துறை அதிகாரிகள் சேகரித்துள்ள நிலையில், பலர் கலக்கத்தில் உள்ளனர்.