செங்கல்பட்டு: செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசை கண்டித்து, அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உலக முதியோர் மற்றும் ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு, மத்திய, மாநில அரசு மற்றும் பொது ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் எதிரில், மாவட்ட தலைவர் ஞானசம்பந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.இதில் ஓய்வூதியத்தை தனியார் மயமாக்குவதை தவிர்க்க வேண்டும், ஏற்புடைய ஊதியம், ஆரோக்கியமான உணவு, தரமான போக்குவரத்து, சுத்தமான குடிநீர் வழங்குதல் என 9 கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட செயலாளர் பன்னீர் செல்வம், நித்தியானந்தன், அருணாசலம், ஜனார்தனம் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.