*திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் பிரமோற்சவத்தின் 9ம் நாளான நேற்று குதிரை வாகனத்தில் விநாயகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். காணிப்பாக்கம் வர சித்தி விநாயகர் கோயில் பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 6 நாட்கள் சுவாமி பல்வேறு வாகனங்களில் அருள்பாலித்தார்.
பிரமோற்சவத்தின் 7வது நாளான 13ம் தேதி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை அஸ்வா வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து இரவு கஜ வாகனத்திற்கு வன்னியர் குல வம்சத்தினர் பூஜை செய்து வாகனத்தை தொடங்கி வைத்தனர். இதனை அடுத்து காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில் பிரமோற்சவத்தின் எட்டாம் நாளான நேற்று முன்தினம் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனையுடன் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. அப்போது வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க பூஜை செய்து தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அசைந்தாடி வந்த தேரில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தி முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜெய் கணேஷா ஜெய் ஜெய் கணேசா என முழக்கமிட்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
இந்நிலையில் பிரமோற்சவத்தின் 9வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து பலிஜ குல வம்சத்தினர் தொடங்கி வைத்தனர். சுவாமியின் வீதிஉலாவின்போது கோலாட்டங்கள், பரதநாட்டியங்கள் நடந்தது. பிரமோற்சவத்தையொட்டி கோயிலில் வில்லு பாட்டு, விநாயகரின் கீர்த்தனைகள் நடந்தது.
அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் குளிர்பானம் தண்ணீர் மற்றும் மோர் அன்னதானம் உள்ளிட்டபை வழங்கப்பட்டது பிரம்மோற்சவம் முன்னிட்டு காணிப்பாக்கம் நகரம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் அதே போல் நகரம் முழுவதும் ஆங்காங்கே சி சி கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து இன்று துவாஜ அவரோகணம் கொடி இறக்கம்நடைபெறும் என கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.