ஆவடி: சென்னை வில்லிவாக்கம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (23). இவரும் பாரதிநகர் 2வது தெருவைச் சேர்ந்த யுவராஜ் (26) என்பவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் பாடியில் உள்ள நண்பரை சந்தித்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு வீட்டுக்கு பைக்கில் கிளம்பினர். பாடி மேம்பாலம் பகுதியில் வந்தபோது, அங்கு சாலை போடும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு வேன் மீது இவர்களது பைக் மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் அருகில் நின்றிருந்த கூலித் தொழிலாளியான ஏழுமலை (60) மீதும் பைக் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் பைக்கை ஓட்டிவந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். யுவராஜ் தலை, நெற்றி, கை, கால்களில் பலத்த காயம் அடைந்தார். முதியவர் ஏழுமலைக்கு இடது காதில் இருந்து ரத்தம் வழிந்தது. தகவலறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான விக்னேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த யுவராஜ், முதியவர் ஏழுமலை ஆகியோரை மீட்டு அதே மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.