வால்பாறையில் ரூ.2.9 கோடி மதிப்பில் ‘ஸ்மார்ட் வேலி’ அமைக்கும் பணி தீவிரம்

*மனித-வன விலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை

வால்பாறை : வால்பாறை பகுதியில் மனித-வன விலங்கு மோதலை தடுக்க வனத்துறையினர் ‘‘ஸ்மார்ட் வேலி’’ அமைத்து வருகின்றனர். கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி 2 வனப்பகுதிகள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் அதிகளவில் காணப்படுகிறது. மேலும், வனவில்ங்குகள் வனப்பகுத்யைவிட்டு வெளியேறி மனிதர்களை தாக்கி வருகிறது.இந்நிலையில், வால்பாறை பகுதிகளில் மனித-வன விலங்கு மோதலை தடுப்பதற்கு வனத்துறையினர் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

மேலும், இயற்கை வேலி, பாதுகாப்பு சுவர், கம்பி வேலி, சோலார் வேலியை தொடர்ந்து தற்போது, ‘ஸ்மார்ட் வேலி’யை மக்களின் பாதுகாப்புக்காக வனத்துறையினர் அமைத்து வருகின்றனர். ஐஓடி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பு தீர்வாக கருதப்படும் வேலிகள் வன விலங்குகளின் நடமாட்டதை அசாதாரண நேரங்களில் கண்டறிந்து செய்கை மூளை திறனை கொண்டு பகுத்தறிந்து, அச்சுறுத்தல் என பகுப்பாய்வு செய்து தகவல் தொடர்பு மின்னணு கருவிகளுக்கு தகவல் அளிக்கும்.

மேலும், அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து பகுப்பாய்வு செய்ய சென்சார்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி முன்னெச்சரிக்கையான பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கும் அலாரங்கள் அல்லது அறிவிப்புகள் போன்ற தானியங்கி கருவிகளை தானாக செயல்படுத்தி பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கும் என்றும், அதை கண்டறிந்து மனிதர்கள் எச்சரிக்கை அடைந்து, வனவிலங்கு குடியிருப்பு பகுதியில் புகுவதை தெரிந்து கொள்ள முடியும் என நம்பப்படுகிறது.

வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் ரூ.2.9 கோடி மதிப்பீட்டில் டானி என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் விர்ச்சுவல் பென்சிங் சிஸ்டம் சூரிய சக்தியில் இயங்கும் மின்னணு கருவியாகும். மனித வசிப்பிடங்களுக்குள் நுழைய முயற்சிக்கும் எந்த ஒரு வன விலங்குகளின் ஊடுருவலைக் கண்டறிந்து, சிறப்பு சத்தம் கொண்டு அவற்றை விரட்டும் என வனச்சரகர் வெங்கடேஷ் தெரிவித்தார். வால்பாறை பகுதியில் சுமார் 1300 இடங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், மனித-வன விலங்கு மோதலை தடுக்க முடியும் என நம்பப்படுகிறது.

Related posts

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி

அம்பாலாவில் இருந்து டெல்லி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து