வால்பாறை : வால்பாறை அருகே ஸ்டேன்மோர் சாலையில் தனியார் ஆம்புலன்ஸ் மீது பைக் மோதி கோவை கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த மாணவர் ஸ்ரீகாந்த் (21). இவர், கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். அவரது நண்பர் காரமடையை சேர்ந்த ரோஷன் (21). இவர்கள் இருவரும் பைக்கில் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர்.
பின்னர், சோலையார் அணை பகுதிக்கு சென்றனர். வால்பாறை படகு இல்லம் அருகே, ஸ்டேன்மோர் சாலையில், வந்த போது வால்பாறை நோக்கி வந்த தனியார் ஆம்புலன்ஸ் மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியது. இதில், பைக்கில் வந்த இருவரும் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த அப்பகுதி மக்கள் மற்றும் வால்பாறை போலீசார் இருவரையும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்ரீகாந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். ரோஷன் முதலுதவிக்கு பின் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வால்பாறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.