சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வள்ளுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில், வள்ளுவர் படத்திற்கு காவி உடை போட்டு, திருநீறு பூச்சு பூசி அச்சிட்டுள்ளதுடன் ‘பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி’ என குறிப்பிட்டிருப்பது வம்புக்கு இழுக்கும் அடாவடித்தனம். வள்ளுவர் படைப்பில் உள்ள 1330 குறட்பாக்களில் ஒன்றுகூட எந்த மதம் சார்ந்தும் பேசுவதில்லை. உலகப் பொதுமறை தந்த தமிழ் சமூகத்தின் தொன்மை சிறப்பு வாய்ந்த புலவரை, சனாதனத் துறவி என இழிவுபடுத்துவது, பகுத்தறிவாளர்களையும் மனித நேயம், நல்லிணக்கம் பேணி வருவோரையும் வம்புக்கு இழுத்து, கலகம் செய்யும் நோக்கம் கொண்டது. ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு ஆர்.என்.ரவி மலிவான செயலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.