Sunday, September 29, 2024
Home » வலங்கைமானில் தனி முத்திரை பதித்த செங்கல் உற்பத்தி, விற்பனை மந்தம்

வலங்கைமானில் தனி முத்திரை பதித்த செங்கல் உற்பத்தி, விற்பனை மந்தம்

by Lakshmipathi

*தயக்கத்தில் உற்பத்தியாளர்கள்

வலங்கைமான் : தனிமுத்திரை பதித்த வலங்கைமானில் செங்கல் உற்பத்தி, விற்பனை மந்தமாக காணப்படுகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் செங்கல் உற்பத்தி பணியில் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நெல், எள், பருத்தி உள்ளிட்ட வேளாண்மை பணிகளோடு வேளாண்மை சார்ந்த தொழில்களான மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு உள்ளிட்டவைகளில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வேளாண்மையோடு சின்ன சிவகாசி என அழைக்கப்படும் அளவிற்கு பட்டாசு உற்பத்தியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வலங்கைமானுக்கு பெருமை சேர்க்கும் விதமாக செங்கல் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதில் குறிப்பாக குடமுருட்டி ஆற்றுக்கும், சுள்ளன் ஆற்றுக்கும் இடையே உள்ள நல்லூர், இனாம் கிளியூர், கோவிந்தகுடி, அணியமங்கலம், சந்திரசேகரபுரம், லாயம் பூண்டி ஆதிச்சமங்கலம், விருப்பாச்சிபுரம், வலங்கைமான், மேலவிடையல், கீழவிடையல், கருப்பூர் சித்தன்வாலூர் தொழுவூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் செங்கல் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் நல்ல நிறத்துடனும், வலுவாகவும் காணப்படுவதால் கட்டுமான பணிகளில் வலங்கைமான் செங்கற்கள் தனி முத்திரை பதித்து வருகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் திருவாரூர் மட்டுமல்லாமல் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செங்கல் உற்பத்தி ஜனவரி மாதத்தில் துவங்குவது வழக்கம். இருப்பினும் நெல் அறுவடைக்கு பிறகு, மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிக அளவில் செங்கல் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த செங்கல் உற்பத்தியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5000 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, மணல் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருவதால் கட்டுமான பணிகள் தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்தாண்டு உற்பத்தி செய்யப்பட்ட செங்கல் விற்பனை செய்வதில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மேகமூட்டத்தால் வழக்கமாக ஜனவரி மாதத்தில் துவங்கும் செங்கல் உற்பத்தி, மேலும் இரண்டு மாதங்கள் காலதாமதமாக துவங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

1 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi