மதுரை: வைகை ஆற்று வெள்ளத்தில் மதுரை யானைக்கல் தரைப்பாலம் மூழ்கியது. ஆற்றை ஒட்டிய சாலை முழுவதும் சூழ்ந்த வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வைகை அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து நேற்று 6,071 கனஅடியும், இன்று காலை 3,791 கனஅடியும் நீர் திறக்கப்பட்டு அந்த நீரானது தற்போது மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய வைகை ஆற்றுக்கு வந்தடைந்தது. வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வைகை ஆற்றில் ஏவி பாலம் இருக்கிறது. இந்த ஏவி பாலத்தின் தடுப்பணை அருகே உள்ள யானைக்கல் தரைப்பாலம் தற்போது நீரில் மூழ்கியுள்ளது.
பொதுவாகவே வைகை ஆற்றில் நீர் அதிகளவில் ஓடினால் இந்த தரைப்பாலமானது நீரில் மூழ்கக்கூடியது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஆற்றை ஒட்டிய சாலை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடியவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சிம்மக்கல், ஆரப்பாளையம் செல்பவர்கள், ஆபத்தான முறையில் வெள்ளத்தை கடந்து செல்கின்றனர். ஆற்று வெள்ளத்தில் இயக்கப்படும் வாகனங்கள் பழுதாகுவதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கரையோரம் தூர்வாரி வெள்ளநீர் வெளியே வராமல் தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.