சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் சேர்ந்த ரயில்வே ஓய்வுபெற்ற ஊழியர் கனகராஜ் தலைமையில், கடந்த 1ம்தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாசுக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 30 பேர் மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு ஒரு கிராமத்தில் சிக்கிக் கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் அனைவரும் மீட்கப்பட்டு நேற்று முன்தினம் டெல்லி வந்தனர்.
நேற்று சிதம்பரத்தை சேர்ந்த கனகராஜ், ராஜா, சாந்தி, சூரியமூர்த்தி, வளர்மதி, கோமதி, மலர், அலமேலு, கனகசபை, ராதா, பார்வதி, குமாரி, பரமேஸ்வரி உள்ளிட்ட 17 பேர் மட்டும் டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தனர். பின்னர் வேன் மூலம் சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக நேற்று மாலை சிதம்பரம் வந்தடைந்தனர். மீதமுள்ள 13 பேர் டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் நேற்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மாலை சென்னை வருகின்றனர்.