சென்னை: உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 13 தமிழர்கள் ரயில் மூலம் நேற்று சென்னை வந்தனர். அவர்களை அமைச்சர்கள் வரவேற்று, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். உத்தரகாண்ட் மாநிலத்திற்கு புனித யாத்திரை சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 30 பேர், நிலச்சரிவு காரணமாக தமிழ்நாடு திரும்ப இயலாமல் சிக்கிக் கொண்டனர். இந்த செய்தியை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நடவடிக்கைகள் விளைவாக மீட்கப்பட்ட 30 தமிழர்களில் 17 நபர்கள் விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தனர்.
நேற்று 13 தமிழர்கள், தமிழ்நாடு அரசினால் பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டு ரயில் மூலம் சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர். அவர்களை வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்று அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம் மூலம் 13 பேரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.