உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். கீழே இறங்கி வர முயன்றபோது கற்கள் விழுந்ததால், அவர்கள் திரும்பி வர முடியாத நிலையில் உள்ளனர்.வேனில் சென்ற பொது திடீரென எதிரிலேயே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். பயணித்த வேனில் எரிபொருள் தீர்ந்ததால் தமிழக பக்தர்கள் 30 பேர் நடுவழியில் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் 30 பேரும் மீட்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் கடலூரின் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கடுமையான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மலைப்பாதையை சரிசெய்ய ஒருவார காலமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை தொடர்புகொண்டு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். உத்தரகாண்ட் மாநில தலைமை செயலாளரை போனில் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கிய தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல் தெரிவித்துள்ளார். உத்தராகண்டில் சிக்கிய 30 பேரும் பாதுகாப்பாக ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வானிலை ஏற்ற வகையில் இருந்தால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு இன்றே தமிழகம் அனுப்பி வைக்கப்படுவார்கள்.