உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் வனப்பகுதியில் புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான புலிகள் காணப்படுகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி, அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன. குறிப்பாக களிநகர் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் புலிகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள அட்கோனா கிராமத்திற்குள் இரவு நேரத்தில் விவசாயி ஒருவரின் வீட்டில் இருந்து வெளியே வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் புலி அங்கிருந்த இரு வீடுகளுக்கு இடையே இருந்த சுவற்றின் மீது ஏறி படுத்துக்கொண்டது. புலி நிற்பதை அறிந்தும் அதைக் காண ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் அக்கிராமத்திற்கு விரைந்து புலியை பிடித்தனர். இதனிடையே இந்த காட்சிகளை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான், “இது உண்மையான வீடியோ தான். ஆனால் இந்த சூழலில் மக்களை கட்டுப்படுத்துவது தான் மிகவும் சிரமமான காரியம்” என்று பதிவிட்டுள்ளார்.