கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை

புழல்: சென்னை வியாசர்பாடி திலகர் தெருவைச் சேர்ந்தவர் ரங்கம் (60). சைக்கிள் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ராணி (55). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ராணி தனது பேத்தியின் திருமணத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த சசி என்ற பெண்ணிடம் ₹1.50 லட்சம் கடன் வாங்கினார். வாரம் ₹15 ஆயிரம் வட்டி கட்டி வந்துள்ளார். இதுவரை ₹3 லட்சம் வரை வட்டி கட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ராணியின் வீட்டிற்கு வந்த சசி வட்டிப்பணம் கேட்டுள்ளார். அப்போது, ராணி தன்னிடம் தற்போது பணம் இல்லை, பணம் வந்ததும் கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

அதனை ஏற்க மறுத்த சசி, ராணியை அவதூறாக பேசினாராம். இதனால் மனவேதனை அடைந்த ராணி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ரங்கம், மனைவி இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செம்பியம் போலீசார் ராணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராணி தனது சாவிற்கு சர்மா நகரைச் சேர்ந்த சசி என்பவர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது