அமெரிக்காவில் உலக புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பு, சாதனைகள் பற்றிய விளக்க உரையாற்றினார் அமைச்சர். மா.சுப்ரமணியன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் உலக புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பு, சாதனைகள் பற்றிய அமைச்சர். மா.சுப்ரமணியன் விளக்க உரையாற்றினார். அதில், அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சீர்மிகு மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சாதனைகள் குறித்து உரையாற்ற வாய்ப்பளித்த முதலமைச்சர் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவத் துறையில் தமிழ்நாடு சிறப்பான சாதனைகள் செய்து, சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. 1923 இல் தொடங்கப்பட்ட பொது சுகாதார அமைப்பின் மூலம் முன்னோடியாக பல்வேறு பொது சுகாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஏழை எளியோர்களுக்காக 23.07.2009 அன்று காப்பீடு திட்டத்தை தொடங்கியவர் 5 முறை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர் . இந்த திட்டம் ‘’முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக’’ கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் தொடங்கிய நாள் முதல் ஜுன் 2024 வரை ரூ.136.25 பில்லியன் செலவில், 14 மில்லியன் மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

மொத்தப் பயனாளிகளில், 4.32 மில்லியன் மக்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.49.45 பில்லியன் செலவில் உயர்சிகிச்சைகள் பெற்றுள்ளனர். மேலும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் முன்னெச்சரிக்கை நோக்கத்துடனும் தொலைநோக்கு பார்வையுடன் 1999 ஆம் ஆண்டு கொண்டுவந்த மற்றொரு திட்டம் ‘’வருமுன் காப்போம் திட்டமாகும்’’. இதன்மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு விரிவான சுகாதார பரிசோதனை, சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

1,353 அவசர ஊர்திகளுடன் 15.09.2008 அன்று 108 அவசரகால பராமரிப்பு சேவை திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்தாலும், அவசர ஊர்த்தி சேவை மையத்தை தொடர்பு கொண்ட பிறகு 11 நிமிடங்கள் 23 வினாடிகளுக்குள் அவசர ஊர்த்தி அந்த இடத்திற்கு சென்றடையும் வகையில் மிகச் சிறப்பாக இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கண் பார்வை குறைபாடுகளை கண்டறிய 2009 ஆம் ஆண்டு ‘’கண்ணொளி காப்போம் திட்டம்’’ தொடங்கப்பட்டது.

இன்றுவரை, மொத்தம் 4.25 மில்லியன் குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டு, 2.7 இலட்சம் மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் , புதுமையான திட்டங்கள் மூலம், தனது தீவிர உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அனைத்து சாலை போக்குவரத்து விபத்துக்களுக்கும் இலவச அவசர மருத்துவ சிகிச்சை வழங்கும் ‘’இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம்’’ 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்கள்.

இத்திட்டத்தின் கீழ் 18.12.2023 முதல் 31.05.2024 வரை, ரூ.2.21 பில்லியன் செலவில் 2,52,981 நோயாளிகள் கட்டணமில்லா சிகிச்சையைப் பெற்றுள்ளனர். இதில் மொத்த பயனாளிகளில் 2,33,039 நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.“கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்”, செப்டம்பர் 29, 2021 அன்று சேலத்தில் உள்ள வாழப்பாடியில் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 25 வகையான பரிசோதனைகளை, 17 சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 2023-24 வரை மொத்தம் 36,69,326 பேர் பயனடைந்துள்ளனர்.

ஆய்வக மாதிரிகளைக் கொண்டு செல்வதற்கான ‘’மக்களைத் தேடி ஆய்வகம் திட்டம்’’ (Hub and Spoke Model) பிப்ரவரி 5, 2024 அன்று 755 ஹப்கள் மற்றும் 2,427 ஸ்போக்குகளை உள்ளடக்கியதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 216 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ஜூன் 2024 வரை, 2,27,000 மாதிரிகள் திறம்பட கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதய பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை வழங்கும் நோக்கில் ‘’இதயம் காப்போம் திட்டம்’’ 27.06.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊரட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.

ஜூன் 2023 மற்றும் ஜூன் 2024 க்கு இடையில், சந்தேகத்திற்கிடமான இதயநோய் அறிகுறிகளுடன் மொத்தம் 8,500 நோயாளிகளுக்கு அவசர மாரடைப்பு மருந்துகள் (Loading Dose) வழங்கப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கப்பட்டு,அவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. அதேபோல் ‘’சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம்’’ 10.07.2023 அன்று சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 4,60,000 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு, 3,361 நோயாளிகள் நாள்பட்ட சிறுநீரக நோய்களுக்கு சந்தேகிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘’தொழிலாளரை தேடி மருத்துவம் எனும் திட்டம்’’ 09.01.2024 அன்று திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரில் உள்ள Hyundai Mobis தொழிற்சாலையில் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் மூலம் இதுவரை 486 தொழிற்சாலைகளில் 2,96,652 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 26,471 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மாநிலம் தழுவிய, வெறிநாய் கடி (Rabies) கட்டுப்பாட்டு முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி (ARV) மற்றும் ஆன்டி-ஸ்னேக் வெனோம் (ASV) வழங்கப்படுகிறது. ARV மற்றும் ASV இன் இருப்பு முறையாக கண்காணிக்கப்பட்டு ஆன்லைன் போர்டல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது, 2008 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இறந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக பெற்று ‘’உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம்’’ தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல், வயிறு, கைகள் என மொத்தம் 7,783 உறுப்புகள், 3,950 சிறிய உறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாக பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில், அதிக எண்ணிக்கையிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கலைஞர் அவர்களின் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்று 23.09.2023 அன்று அறிவித்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த பிறகு இதுவரை 200 உடல்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு பிந்தைய பாதிப்புகளில் இருந்தும் மக்களுக்கு தேவையான மருத்துவம் அவர்களை சென்றடையும் நோக்கில், ‘’மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’’ தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.08.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது, முதல் பயனாளியான கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளியில் உள்ள சரோஜம்மாளுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயஉதவி குழுவிலிருந்து பெண் சுகாதார தன்னார்வலர்களின் (WHVs) மருத்துவத் துறையுடன் இணைந்து மக்களுக்கு தேவையான மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர்.

கிராமப்புறங்களில் 8,713 மற்றும் நகர்ப்புறங்களில் 2,256 பேர் என்று மொத்தம் 10,969 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு WHV களால் வீட்டிற்கே சென்று மருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 463 பிளாக்குகளில் ஒரு செவிலியர் ஒரு பிசியோதெரபிஸ்ட் அடங்கிய குழுக்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுநீரக நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று CAPD பைகளை செவிலியர்களை கொண்டு வழங்கும் திட்டமும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பொதுமக்கள் மருத்துவமனைக்கு சென்று ஹீமோடையாலிசிஸ் மேற்கொள்ளும் நடைமுறை தவிர்க்கப்படுகிறது. மேலும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் ஒருகோடி பயனாளிகளை தாண்டி செயல்பட்டு வருகிறது. இதில் 23.02.2022 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கத்தில் 50 இலட்சமாவது பயனாளியாக பாஞ்சாலையும், 10.04.2022 அன்று மதுரை மாவட்டம் மையீட்டாம்பட்டி 60 இலட்சமாவது பயனாளியான பெரியசாமியும், 21.06.2022 அன்று நாமக்கல் மாவட்டத்தில் 75 இலட்சமாவது பயனாளியாக நல்லம்மாளும், 06.08.2022 அன்று சென்னை கோதாமேடு பகுதியில் 80 இலட்சமாவது பயனாளியாக சாந்தி, 25.09.2022 அன்று சென்னையில் 90 இலட்சமாவது பயனாளியாக ஜரீனா பேகமும், 29.12.2022 அன்று 1 கோடியாவது பயனாளியாக திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு நேரடியாக சென்று மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ சேவைகள் மலிவாக கிடைக்கக்கூடிய, அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் நிலை ஏற்படும். தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அதிக சமபங்கு, சமூக உள்ளடக்கம் மற்றும் சமூகப் பங்கேற்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வலுவடைந்து வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பயனாளிகளிடமிருந்து அவர்களின் வாழ்வில் இத்திட்டத்தின் நேர்மறையான தாக்கத்தைப் படம்பிடிக்கும் சான்றுகளைக் கொண்ட ஒரு நிமிட காணொளியின் மூலம், மிகவும் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் மக்களுக்கு சேவை செய்ய பாடுபடும் தமிழ்நாடு அரசின் சாதனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான இந்த சிறந்த வாய்ப்பிற்காக எனது மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இவ்வாறு உரையாற்றினார்.

Related posts

மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே கைது செய்ய திட்டம்!

திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயில் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு!

தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2.0-வை வெளியிட்டது தமிழ்நாடு அரசு