நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் வரலாற்றில் இறுதி போட்டியை முதல் முறையாக 10 லட்சம் பேர் நேரில் பார்த்துள்ளனர். டென்னிஸ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நேற்று முன் தினம் நிறைவு பெற்றது. இதில் கடந்த சனிக்கிழமை நடந்த மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி சபலென்காவும், நேற்று முன் தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் டெய்லர் பிரிட்சை வீழ்த்தி ஜானிக் சின்னரும் கோப்பையை கைப்பற்றினர். இதில் கோப்பை கைப்பற்றிய சின்னர் மற்றும் சபலென்காவுக்கு தலா ரூ.30.23 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் இறுதி போட்டி நடைபெற்ற பில்லி ஜீன் கிங் தேசிய டென்னிஸ் அரங்கில் முதல் முறையாக சுமார் 10 லட்சம் பேர் கூடி போட்டியை கண்டு ரசித்துள்ளனர்.
இதுவரை நடைபெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் வரலாற்றிலேயே இந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் வந்ததில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன் தொடரை 8,32,640 பேர் கண்டுகளித்த நிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் ஆண்கள் இறுதி போட்டியை காண பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் தனது ஆண் நண்பர் டிரெவிஸ் கெல்சே உடன் வந்திருந்தது ரசிகர்களை மகிழ்ச்சியுற செய்தது.