சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக நீலகிரி மாவட்டம் உதகையை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் அருகில் இருக்கும் கிராம ஊராட்சிகளை இணைக்கும் பணியை தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் 460 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கோவை மாநகராட்சியுடன் ஒரு நகராட்சி, 4 பேரூராட்சிகள், 11 கிராம ஊராட்சிகளும், ஆவடி மாநகராட்சிகளுடன் 3 நகராட்சிகள், 19 கிராம ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிதாக உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளுடன் 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. அதன்படி சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் பதவிக்காலம் முடிந்தவுடன் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதோடு உதகை நகராட்சியை விரிவாக்கம் செய்து மாநகராட்சியாக அறிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.