யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் 7.3.2023 அன்று ெதாடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் 7,500 வழங்கப்படும். இத்திட்டம் கடந்த ஆண்டு முதல் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அதன் கீழ் இயங்கி வரும் நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு-2025க்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டு தேர்வை 15.9.2024 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.

கடந்த ஆண்டை போலவே, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான (ஆர்.ஏ.புரம் சென்னை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் மதுரை) சேர்க்கை மதிப்பீடு தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை மற்றும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கை பெற விரும்பும் ஆர்வமுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்து பார்த்து, 2ம் தேதி (இன்று) முதல் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 17ம் தேதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என ஆளுநர் கூறியதற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1556 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல்