Monday, July 1, 2024
Home » இந்தியாவின் 30வது ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி பதவி ஏற்பு

இந்தியாவின் 30வது ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி பதவி ஏற்பு

by Ranjith

புதுடெல்லி: இந்தியாவின் 30வது ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நேற்று பதவி ஏற்றார்.  இந்திய ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே கடந்த 2022 ஏப்ரல் முதல் பதவி வகித்து வந்தார். இவரது பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையடுத்து லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியை ராணுவ தளபதியாக அறிவித்து கடந்த 12ம் தேதி ஒன்றிய அரசு அறிவிப்பு வௌியிட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய ராணுவத்தின் 30வது தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நேற்று பதவி ஏற்று கொண்டார்.  மத்தியபிரதேசத்தில் கடந்த 1964 ஜூலை 1ம் தேதி பிறந்த உபேந்திர திவேதி, சைனிக் பள்ளி ரேவா, தேசிய பாதுகாப்பு கல்லூரி, இந்திய ராணுவ கல்லூரி மற்றும் அமெரிக்க ராணுவ போர் கல்லூரி உள்பட பல்வேறு நிறுவனங்களில் பயின்றுள்ளார். தொடர்ந்து 1984 டிசம்பர் 15ம் தேதி ராணுவத்தின் காலாட் படையில்(ஜம்மு மற்றும் காஷ்மீர் ரைபிள்ஸ்) தன் முதல் ராணுவ பணியை துவங்கினார்.

தொடர்ந்து தன் 40 ஆண்டுகால ராணுவ சேவையில் கமாண்ட் ஆஃப் ரெஜிமென்ட்(18 ஜம்மு ஜம்மு மற்றும் காஷ்மீர் ரைபிள்ஸ்), பிரிகேட்(26 பிரிவு அசாம் ரைபிள்ஸ்), இன்ஸ்பெக்டர் ஜெனரல், அசாம் ரைபிள்ஸ்(கிழக்கு) உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார். உபேந்திர திவேதி, கடந்த பிப்ரவரி 19ல் ராணுவு துணைத்தலைவராக பொறுப்பேற்கும் முன்,டைரக்டர் ஜெனரல்(காலாட்படை) மற்றும் 2022-24 வரையிலான காலகட்டத்தில் வடக்கு கட்டளை தலைமையகத்தின் தலைமை பொது அதிகாரி உள்பட முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.

* ராணுவ, கடற்படை தளபதி 2 பேரும் பள்ளி தோழர்கள்
இந்திய கடற்படையின் 26வது தலைமை தளபதியாக அட்மிரல் தினேஷ் திரிபாதி கடந்த மே 1ம் தேதி பதவி ஏற்றார். ராணுவ தளபதியாக பதவி ஏற்றுள்ள உபேந்திர திவேதியும், தினேஷ் திரிபாதியும் கடந்த 1970ம் ஆண்டு ரேவா சைனிக் பள்ளியிலும் இருவரும் 5ம் வகுப்பு ஒன்றாக பயின்றுள்ளனர்” என்ற சுவாரஸ்ய தகவல் வௌியாகி உள்ளது.

You may also like

Leave a Comment

fourteen − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi