ஜான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி ஜான்பூர் ரயில் நிலையம் அருகே பாட்னா-புதுடெல்லி செல்லும் ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயரிழந்தனர். மேலும் 62 பேர் காயமடைந்தனர். ரயில்பெட்டியின் கழிப்பறையில் வைக்கப்பட்டு இருந்த ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருட்களால் இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டு இருந்தது. இரண்டு பேர் சூட்கேசுடன் ரயிலில் ஏறியதாகவும், சிறிது நேரத்தில் சூட்கேஸ் இன்றி இரண்டு பேரும் இறங்கிவிட்டதாகவும் சாட்சியங்கள் தெரிவித்தன. இந்த வழக்கு ஜான்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி ராஜேஷ் குமார் ராய், ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேற்குவங்கத்தை சேர்ந்த நபிகுல் விஸ்வாஸ் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த ஹிலாலுதீன் ஆகிய இரண்டு பேரும் குற்றவாளிகள். தண்டனை விவரங்கள் ஜனவரி 5ம் தேதி அறிவிக்கப்படும்’ என்று கடந்த மாதம் 23ம் தேதி அறிவித்தார்.நேற்று இந்த வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி ரயிலில் குண்டு வைத்த வழக்கில் நபிகுல் விஸ்வாஸ், ஹிலாலுதீன் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.