லக்னோ: நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. 15.29 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 20.41 லட்சம் முதல் முறை வாக்காளர்களும் உள்ளனர். ஆனால், கடந்த 2019 மக்களவை தேர்தலில் இம்மாநிலத்தில் 59.11 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. இதனால், உபியில் இம்முறை வாக்கு சதவீதத்தை அதிகரிக்க திட்டம் ஒன்றை தலைமை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.
இதன்படி, கடந்த 2019 தேர்தலில் குறைந்த வாக்குகள் பதிவான புல்பூர் (48.57%), கான்பூர் (51.39%), அலகாபாத் (51.75%), ஸ்ரவஸ்தி (52.05%), கோண்டா (52.11%), டோமரியகஞ்ச் (52.26%), பிரதாப்கர் (53.36%), பதோஹி (53.45%), அமேதி (54.05%) மற்றும் சந்த் கபீர் நகர் (54.15%) ஆகிய 10 தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள வாக்குச்சாவடிகள் பட்டியலிடப்பட்டு வாக்குப்பதிவு குறைவாக இருப்பது ஏன் என்பது குறித்து மாவட்ட கலெக்டர்கள் நேரில் சென்று ஆய்வு செய்வார். மேலும் வாக்களிப்பது குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.