தார்: மத்தியப்பிரதேசத்தின் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் தார் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மூன்று ஆண்கள் அந்த பெண்ணின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்ட நிலையில் மற்றொரு நபர் தடியால் அந்த பெண்ணின் பின்பக்கத்தில் கொடூரமாக அடிக்கிறார். நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கிருந்தவர்கள் யாரும் அந்த பெண்ணை காப்பாற்றுவதற்கு முன்வரவில்லை. மாறாக பெண்ணை அடித்து சித்ரவதை செய்யும் வீடியோவை எடுத்து சமூகவலைதளத்தில் வைரலாக்கியுள்ளனர். வீடியோவின் அடிப்படையில் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். மற்ற மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பந்தப்பட்ட பெண் திருமணம் ஆனவர். அவர் கடந்த ஜூன் 20ம் தேதி வீட்டில் யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு ஆணுடன் சென்றுவிட்டதால் அந்த பெண்ணை கண்டுபிடித்து தாக்கியதாக கூறப்படுகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒன்றிய இணை அமைச்சர் சாவித்ரி தாகூரின் சொந்த தொகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ சர்ச்சையானதால் பெண்ணை அடித்த பஞ்சாயத்து தலைவர் நூர்சிங் பூரியா உள்பட 7 பேர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.