ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாஜக நிர்வாகியிடமே ரூ.9 லட்சம் மோசடி செய்த விருதுநகர் பாஜக மாவட்ட தலைவர் கைது..!!

விருதுநகர்: ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் வி.கே.சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜக மாவட்டச் செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்ட நிலையில் மாவட்ட தலைவர் சுரேஷை போலீஸார் கைது செய்தனர். சிவகாசியைச் சேர்ந்த பாஜக மாவட்ட நிர்வாகியான பாண்டியன் என்பவரது மகனுக்கு ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி அரங்கேறியுள்ளது. துறைமுகம் அல்லது ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கடந்த 2017ம் ஆண்டில் சுரேஷ், கலையரசன் சேர்ந்து பாண்டியனிடம் ரூ. 11 லட்சம் பெற்றுள்ளனர்.

ஆனால் உறுதியளித்தபடி வேலை வாங்கித் தராததால் பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட பாண்டியனுக்கு ரூ.2 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். எஞ்சிய ரூ.9 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் பாண்டியன் புகார் அளித்தார். பாண்டியனின் புகாரை விசாரித்த குற்றப்பிரிவு போலீஸ் கடந்த டிசம்பர் மாதம் கலையரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாஜக மாவட்ட தலைவரான சுரேஷுக்கு நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி இருந்தது. இந்நிலையில், முன்ஜாமின் நிபந்தனைபடி பணத்தை திருப்பிக்கொடுக்காமல் சுரேஷ் ஏமாற்றியதை அடுத்து அவரை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, திருத்தங்கலில் உள்ள தனது வீட்டில் இருந்த சுரேஷை விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்