சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் அதிகமான குடும்பங்கள் வயநாடு மற்றும் சூரல்மலா ஆகிய பகுதியில் சிக்கித் தவிக்கின்றனர். அளவுக்கு அதிகமாக பெய்த மழை அதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் இந்த நிலச்சரிவுக்குகாரணமாக சொல்லப்படுகிறது.சகோதர மாநிலத்தில் நிகழ்ந்துள்ள இந்த பேரிடர், பெரிய மனவருத்தத்தை அளிக்கிறது. இந்த பேரிடரிலிருந்து வயநாடு மக்களும், கேரள உறவுகளும் விரைந்து நிவாரணம் பெற எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறோம், இந்த சோகமான நேரத்தில் தமிழக மக்களும் உங்களோடு துணையாக நிற்போம் என்பதைதெரிவித்துக்கொள்கிறோம்.
நிவாரணப்பணிகளில் கேரள அரசும் இந்திய ராணுவமும் உடனடியாக ஈடுபட்டுள்ளன. ஒன்றிய அரசு உயிரிழந்தவர்களின்குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. எதிர்கட்சித் தலைவர் வயநாடு பகுதிக்குநிவாரணப் பணிகளை பார்வையிட பயணிப்பதாக செய்திகள் வருகின்றன. இந்நேரத்தில் வழக்கம்போல் இந்த இழப்பின் போதும் அரசியல் செய்யாமல் ஒன்றிய அரசு கேரள மக்களுடனும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள அரசோடும் உறுதுணையாக நிற்க வேண்டும். கடந்த பட்ஜெட்டில் எதிர்கட்சிகளின் மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்குவதில் காட்டிய பாரபட்சத்தை இந்த அழிவின் போதும் தொடராமல் கேரள அரசுக்கு நிதி உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் ஒன்றிய அரசு ஒத்துழைப்புவழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.