Sunday, June 30, 2024
Home » ஒன்றிய அரசு பெயரில் மோசடி சேலத்தில் கைதான 2 பேரை காவலில் எடுத்து விசாரணை: நமீதா கணவரிடமும் விசாரிக்க திட்டம் பாஜ முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பா?

ஒன்றிய அரசு பெயரில் மோசடி சேலத்தில் கைதான 2 பேரை காவலில் எடுத்து விசாரணை: நமீதா கணவரிடமும் விசாரிக்க திட்டம் பாஜ முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பா?

by Karthik Yash

சேலம்: சேலத்தில் உள்ள பிரபல ஓட்டலில் எம்எஸ்எம்இ புரமோசன் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் சிறு தொழில் செய்வதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து கடன் பெற்றுத் தருவதாக கூறி கூட்டம் ஒன்று நடந்தது. இதில், இந்த அமைப்பின் தேசிய தலைவரான மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன் (60), செயலாளரான பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ் (34), தமிழ்நாடு சேர்மனான நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் முத்துராமன் அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் வந்தது.

இதுதொடர்பாக சூரமங்கலம் போலீசார் முத்துராமன், துஷ்யந்த்யாதவ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சேலம் ஜாகீர்அம்மாப்பாளையத்தை சேர்ந்த பைனான்சியர் கோபால்சாமி(45) அளித்த புகாரில், நேசனல் புரமோசன் கவுன்சில் சேர்மன் முத்துராமன் எனக்கு தமிழ்நாடு கவுன்சில் சேர்மன் பதவி வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் வாங்கினார். ஆனால் எனக்கு தராமல் நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரியிடம் ரூ.4 கோடியை பெற்று அவருக்கு கொடுத்து விட்டார். எனக்கு ரூ.9லட்சத்தை மட்டும் திருப்பி தந்து, ரூ.41 லட்சத்தை மோசடி செய்துவிட்டார்’ என கூறியிருந்தார். இதையடுத்து முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கைதான இருவரும் ஒன்றிய அரசு பதவியில் இருப்பதாக கூறி அரசு முத்திரை, தேசிய கொடியை பயன்படுத்தி யுள்ளதால், மோசடியில் பாஜ முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரிக்கவும், எவ்வழிகளிலெல்லாம் மோசடி செய்துள்ளனர் என்பதை கண்டுபிடிக்கவும் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சூரமங்கலம் போலீசார் முடிவு செய்தனர். இதற்காக சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி தினேஷ்குமார் அனுமதி வழங்கினார். இதையடுத்து சூரமங்கலம் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் பெறப்படும் தகவலுக்குப்பின் நடிகை நமீதாவின் கணவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா? என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.

You may also like

Leave a Comment

twelve + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi