மாநில திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில், அனைத்து மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம், மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இதற்கு ஆதிதிராவிரடர் நலக்குழு செயலாளரும் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏவுமான ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
இதில் மாநில இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு 72 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார். அவருக்கு ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வெள்ளி செங்கோல் நினைவு பரிசு வழங்கினார்.
இதன்பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; புதிய பாராளுமன்றம் திறப்புவிழாவில் இந்தியாவின் முதல் குடிமகன் என்ற அடிப்படையில் ஜனாதிபதியை அழைத்திருக்க வேண்டும். ஆனால் அழைக்கவில்லை. காரணம் அவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர், கணவரை இழந்தவர் என்பதால் அழைக்கவில்லை. மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டி அதன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டதால் சாமியார்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
தற்போது ஒன்றிய மோடி அரசு மதத்தை அரசியலாகவும் அரசியலை மதமாகவும் பார்க்கிறது. இதனால் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு ஒன்றிய அரசு எதையும் செய்யவில்லை. பாஜக தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே உடை என்று அனைத்தையும் ஒன்றாக்க நினைக்கிறது. பெரும்பாலான நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டது. ஒன்றிய அரசின் செயல்களுக்கு திமுகவும் ஒத்துழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அது முடியாத காரணத்தால் ஈடி, சிபிஐ, ஐடி என்று மிரட்டி பார்க்கிறது.
ஆனால் இந்த மிரட்டலுக்கு திமுக காரர்களின் வீட்டில் கைக்குழந்தை கூட பயப்படாது. பெரியார், அண்ணா, கலைஞரால் உருவாக்கப்பட்ட நாங்கள் சுயமரியாதையோடு வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு உதயநிதி பேசினார். விழாவில், மாநில நிர்வாகிகள் க.சுந்தரம், வி.பி.ராஜன், திப்பம்பட்டி ஆறுசாமி, மருதூர் ஏ.இராமலிங்கம், சி.தசரதன், எஸ்.மாரியப்பன் கென்னடி, செ.புஷ்பராஜ், பி.துரைசாமி, மு.பரமானந்தம் முன்னிலை வகித்தனர். துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு, மா.மதிவேந்தன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், துறைமுகம் காஜா, மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, தாயகம் கவி எம்எல்ஏ ஆகியோரும் பேசினர் இதன்பிறகு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.