புதுடெல்லி: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் வழங்குவதற்கு ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தியை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து பேசினார்கள். பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளின் பிரதிநிதிகள் குழுவினர் அந்தந்த மாநிலங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து முறையிட்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, நாங்கள் இந்தியா கூட்டணி தலைவர்களுடன் விவாதிப்போம். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதத்தை விவசாயிகள் பெறுவதற்காக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்” என்றார். காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால், பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் ரந்வாரா உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.