சென்னை: நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திருச்சி தொகுதி எம்.பி. துரை வைகோ பேசியதாவது: ஒன்றிய அரசின் நடப்பு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 6362 கோடி, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ரயில் பாதை திட்டங்களை முடிக்க போதுமானதாக இல்லை. மத்திய பிரதேசத்திற்கு 14,738 கோடியும், மகாராஷ்டிராவிற்கு 15,940 கோடியும், உத்தரபிரதேசத்திற்கு 19,848 கோடியும் ஒதுக்கியிருப்பது ஒன்றிய அரசின் தமிழ்நாட்டின் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையை தெளிவாக காட்டுகிறது.
தமிழக மக்கள் பாஜ கூட்டணிக்கு ஒரு இடத்தைக் கூட வழங்காததால் தமிழகத்தின் மீது இவ்வளவு அலட்சியப் போக்கை ஒன்றிய அரசு காட்டுகிறதா? பாஜ கூட்டணிக்கு வாக்களிக்கத் தவறினால் ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு எந்த உதவியும் கிடைக்காது என பாமக தலைவர் அன்புமணி பொதுவெளியில் கூறியிருப்பதால் இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன். இவ்வாறு துரைவைகோ பேசினார்.