இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் பல அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பணியாளர்களின் வருகையை குறிக்க பயோமெட்ரின் முறையை பயன்படுத்துவதில்லை என்ற குற்ற்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து தங்கள் ஊழியர்கள் வருகையை பயோமெட்ரிக் பதிவு மூலம் உறுதி செய்யுமாறு அனைத்து அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்களை ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. பயோமெட்ரிக் பதிவு 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஊழியர்களின் வருகைப் பதிவை அவ்வப்போது கண்காணித்து அலுவலக நேரத்தையும், பணியாளர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதையும் உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து பணிக்கு தாமதமாக வருபவர்கள், பணி நேரத்துக்கு முன்னதாக வௌியேறுபவர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.