Sunday, September 15, 2024
Home » காங்கிரஸ் பணம் ரூ.65 கோடியை ஒன்றிய அரசு கொள்ளை அடித்துள்ளது: காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு

காங்கிரஸ் பணம் ரூ.65 கோடியை ஒன்றிய அரசு கொள்ளை அடித்துள்ளது: காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு

by Ranjith
Published: Last Updated on

புதுடெல்லி: பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு நிதி பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது என்றும், மக்களவை தேர்தலில் கட்சியை பொருளாதார ரீதியில் முடக்கும் வகையில் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.65 கோடி கொள்ளை அடித்துள்ளது என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
காங்கிரஸ் பொது செயலாளர்கள் கே.சி.வேணுகோபால்,ஜெயராம் ரமேஷ்,பொருளாளர் அஜய் மாக்கன் ஆகியோர் நேற்று கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்,‘‘ ஒன்றிய அரசு காங்கிரசுக்கு எதிராக வரி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

மக்களவை தேர்தலுக்கு முன் கட்சியை பொருளாதார ரீதியாக முடக்கும் வகையில் கட்சியின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.65 கோடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை,விவசாயிகள் போராட்டம் மற்றும் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளால் ஒன்றிய அரசு கலக்கமடைந்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன் காங்கிரசை பொருளாதார ரீதியாக முடக்குவதற்கான சதியில் அரசு ஈடுபட்டுள்ளது. அப்போதுதான் தேர்தல் பணிகளை கட்சி முழுமையாக செய்ய முடியாது என இந்த வேலைகளை செய்கிறது.

நாட்டின் பிரதான கட்சிக்கு எதிராக நிதி பயங்கரவாதம் நடத்தப்படுகிறது. வருமான வரித்துறையின் மூலம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.65 கோடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர். கே.சி.வேணுகோபால் கூறுகையில்,‘‘இந்த நடவடிக்கை ஜனநாயக கொள்கைகள் மற்றும் மதிப்புகளுக்கு எதிரானது.

ஒன்றியத்தில் ஆளும் பாஜ கட்சி ஜனநாயகத்தை கொலை செய்து நாட்டை சர்வாதிகார ராஜ்ஜியத்திற்கு இழுக்க முயல்கிறது’’ என்றார். அஜய் மாக்கன் ‘‘ 2019ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 5 வருடங்களுக்கு பிறகு அதாவது, மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.65 கோடி எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

* படுகொலை செய்யப்பட்ட ஜனநாயகம்
ஜெயராம் ரமேஷ் டிவிட்டரில், ‘‘விவசாயிகள் போராட்டம் தொடர்பாக டிவிட்டர் வலைதளத்தில் பதிவிடும் நபர்களின் கணக்குகளை முடக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதை டிவிட்டர் நிர்வாகம் ஏற்கவில்லை.விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடைய 177 கணக்குகளை முடக்குவதற்கு சமூக வலைதளங்களுக்கு ஒன்றிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதை டேக் செய்து ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகையில் இந்தியாவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

two × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi